உலகம்
மகிந்த ராஜபக்சே

மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை: மாலத்தீவு மறுப்பு

Published On 2022-05-26 02:40 GMT   |   Update On 2022-05-26 02:40 GMT
மகிந்த ராஜபக்சே, தனக்கும் தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
கொழும்பு :

இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

ஆனால் மாலத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது' என்று கூறினார்.

இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News