உலகம்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை: பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியை ஒப்படைக்கத் தயார்- கோத்தபய ராஜபக்சே

Published On 2022-04-05 06:23 GMT   |   Update On 2022-04-05 06:23 GMT
பாராளுமன்றக் கூட்டத்தில் அரசாங்கம் தனது பலத்தை காட்டத் தவறினால், புதிய பிரதமரைத் தீர்மானிக்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரிடம் யோசனை முன்வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை பாராளுமன்றம் கூடியது. நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை பாராளுமன்றம் கூடியது.

இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என்றும், 113 இடங்களில் பெரும்பான்மை இருப்பதை எந்தக் கட்சி நிரூபிக்கிறதோ அந்த கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயார் என்று கோத்தபய ராஜபக்சே கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எஸ்எல்பிபி கட்சி தனது 113 இடங்களையும் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. அப்போதுதான் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்சே பிரதமராக நீடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்றக் கூட்டத்தில் அரசாங்கம் தனது எண்ணிக்கையை காட்டத் தவறினால், புதிய பிரதமரைத் தீர்மானிக்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரிடம் யோசனை முன்வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்.. ராகுல் காந்திக்கு ரூ.50 லட்சம் சொத்தை எழுதி வைத்த மூதாட்டி
Tags:    

Similar News