உலகம்
மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சீனா நடவடிக்கையால் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது- மத்திய மந்திரி ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

Published On 2022-02-12 10:46 GMT   |   Update On 2022-02-12 10:46 GMT
கொரோனா சவாலை எதிர்கொள்வது மற்றும் பிற நாடுகளுக்கு குறிப்பாக தடுப்பூசிகள் மூலம் உதவுவது போன்ற அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டோம்.

மெல்போர்ன்:

குவாட் அமைப்பின் 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா சவாலை எதிர்கொள்வது மற்றும் பிற நாடுகளுக்கு குறிப்பாக தடுப்பூசிகள் மூலம் உதவுவது போன்ற அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டோம்.

ஆஸ்திரேலிய அரசு எல்லையை திறப்பதை நான் வரவேற்கிறேன். இது இந்தியாவில் திரும்பி வருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், பிரிந்த குடும்பத்தினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இது பாராட்டத் தக்க ஒன்றாகும்.

இந்தியா-சீனா உறவுகளை பற்றி விவாதித்தோம். இது எங்கள் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டோம்.

2020-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி எல்லையில் வீரர்களை குவிக்க மாட்டோம் என சீனா உறுதி அளித்து இருந்தது. ஆனால் தற்போது அதை புறக்கணிக்கும் வகையில் சீனாவின் நடவடிக்கை உள்ளது. இதனால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் தற்போது பதட்டமாக உள்ளது. சீனா அரசு ஒப்பந்தத்தை மீறி செயல்படுவது கவலை அளிக்கிறது.

கூட்டத்தில் பயங்கரவாத மற்றும் தீவிரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடருவது கவலையளிக்கிறது. தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News