செய்திகள்
சிறுமி யாசியா போலீஸ் ரோந்து பிரிவின் சொகுசு காரில் அமர வைக்கப்பட்ட காட்சியை படத்தில் காணலாம்.

போலீசார் சீருடை கண்டு பயம்- ரோந்து காரில் சிறுமியை அமர வைத்து மகிழ்வித்த அதிகாரிகள்

Published On 2020-09-12 04:04 GMT   |   Update On 2020-09-12 04:04 GMT
போலீசார் சீருடை கண்டு பயந்த சிறுமியை ரோந்து காரில் அமர வைத்து அதிகாரிகள் மகிழ்வித்தனர்.
துபாய்:

துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த 3 வயது சிறுமி யாசியாவுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்து பயம். குழந்தையாக இருக்கும்போதே போலீசாரை பார்த்து மிரண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். அவளது பெற்றோர் எத்தனை சமாதானம் செய்தும், விளக்கமாக கூறியும் அந்த சிறுமியின் பயம் தெளியவில்லை.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் எதிர்காலத்தில் தனது மகளுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அவளின் பயத்தை போக்க வேண்டும் என போலீஸ் துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட போலீஸ் துறையின் சுற்றுலா பாதுகாப்பு மற்றும் ரோந்து பிரிவு தலைவர் ஒபைத் பின் அபித் தலைமையில் தனிப்படை பெண் போலீசார் சிறுமியின் வீட்டிற்கே சென்றனர்.

அவர்கள் கையோடு சிறுமிக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு சென்றனர். முதலில் போலீஸ் அதிகாரிகள் சிறுமியிடம் அன்பாகவும், வேடிக்கையாகவும் பேச்சு கொடுத்தனர். குறிப்பாக ரோந்து பிரிவில் பயன்படுத்தப்படும் சொகுசு காரில் அந்த சிறுமியை அமர வைத்தனர். பிறகு அந்த காரில் அந்த வீட்டு பகுதியில் உள்ள சாலையில் அழைத்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த சிறுமிக்கு பயம் நீங்கி புன்னகை புரிந்ததும் பெற்றோர் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். துபாய் போலீஸ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியினை தெரிவித்தனர். இறுதியில் அந்த சிறுமிக்கு பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசினை அதிகாரிகள் வழங்கினர்.

இந்த சம்பவத்திற்கு பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக அதில் பாதுகாப்பு பணி மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் அக்கறை காட்டுவது சிறப்பாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News