செய்திகள்
தற்காலிக மருத்துவமனை

அதிகரிக்கும் கொரோனா தொற்று - கண்காட்சி மையத்தை மருத்துவமனையாக மாற்றிய ஹாங்காங்

Published On 2020-08-02 05:04 IST   |   Update On 2020-08-02 05:04:00 IST
ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கண்காட்சி மையம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்:  

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து அந்நாட்டின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரமான ஹாங்காங் சீனாவுடனான போக்குவரத்து தொடர்பை உடனடியாக துண்டித்தது. இதனால் ஹாங்காங்கில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், ஹாங்காங்கில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை கொரோனா தொடங்கியது முதல் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 60 சதவிகிதம் ஆகும்.

தற்போதைய நிலவரப்படி, ஹாங்காங்கில் 3 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 22 உயிரிழப்புகள் கடந்த மாதம் மட்டும் 
நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், ஹாங்காங்கில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் மருத்துவமனையில் இடவசதியை உறுதி செய்யும் விதமாக தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக மருத்துவமனை 500 படுக்கைகளை கொண்டது.

இந்த தற்காலிக மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு குறைவான அளவில் உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. ஹாங்காங்கில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் மக்கள்
மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
 

Similar News