செய்திகள் (Tamil News)
கோப்பு படம்

மொசாம்பிக்கில் இயற்கை எரிவாயு நிறுவன ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 பேர் பலி

Published On 2020-07-07 00:14 GMT   |   Update On 2020-07-07 00:14 GMT
மொசாம்பிக் நாட்டில் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி 8 பேர் உயிரிழந்தனர்.
மாபுடோ:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.ஸ். பயங்கரவாதிகளின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல் ஷபாப் பயங்கரவாதிகள், பொதுமக்கள், போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். 

இதற்கிடையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கபோ டெல்ஹோடா மாகாணத்தில் அயல்நாட்டை சேர்ந்த தனியார் எண்ணெய் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கியுள்ளது. 

இதற்கான தொழிற்சாலைகளை அமைக்கும் பணியில் நூற்றூக்கணக்கானவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனத்தில் கட்டிட ஊழியராக வேலை செய்தவர்கள் நேற்று தங்கள் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற வேன் மொகிம்பா டா பர்யா என்ற பகுதியை கடந்தபோது அதை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 3 பேரை பிணைக்கைதிகளாகவும் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை 
நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News