செய்திகள்
கோப்பு படம்

இருமல், மூச்சு திணறல் உள்ள ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

Published On 2020-04-25 05:28 GMT   |   Update On 2020-04-25 05:28 GMT
மூச்சு திணறல், தொடர் இருமல், போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
கான்பெர்ரா:

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தாக்கத்தின் முதல் நிலையை நாடு கடந்துள்ளது.

மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அப்போதுதான் அதன் தாக்கத்தை முழுமையாக கண்டறிய இயலும்.

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடல் நலம் குன்றியவர்கள் மட்டும் அணிந்தால் போதும். இதனால் அவர்கள் மூலம் பிறருக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம். தற்போது மக்கள் பயன்படுத்தும் முக கவசங்கள் அனைத்துமே தரமானவை என்று கூற முடியாது. இவை மக்களுக்கு அசவுகரியம் தருபவையாகவும் உள்ளன.

அதேநேரம் விமான நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமான ஒன்று.

பள்ளிகளில் மாணவ, மாணவர்கள் 1.5 மீட்டர் அல்லது 4.5 சதுர மீட்டர் சமூக இடைவெளி விதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயமில்லை. பள்ளிகளில் ஒரு மாணவரிடம் இருந்து இன்னொரு மாணவருக்கு கொரோனா பரவுவதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் வீடுகளில் இருந்தபோதுதான் பெற்றோர் மூலம் அவர்கள் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது, தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News