செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா

Published On 2019-04-25 05:27 GMT   |   Update On 2019-04-25 05:32 GMT
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. #MarsQuake
வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் 'இன்சைட்' விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம்  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கங்கள், பனிப்பாறை சரிவுகள், விண்கற்களின் தாக்குதல் போன்றவை ஏற்படும். இவற்றை துல்லியமாக ஆய்வு செய்யவே இந்த இன்சைட் விண்கலம் ஏவப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.



இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில்  பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் செவ்வாயின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 'மார்ஸ்குவேக்' என அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் அதிர்வு ஏதுமில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 10,11 ஆகிய தேதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களின் தன்மை, அளவு மற்றும் விளைவுகள் குறித்து நாசா விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #MarsQuake

 
Tags:    

Similar News