செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் காண்டா மிருக வேட்டைக்கு சென்றவர் சிங்கங்களுக்கு இரையானார்

Published On 2019-04-08 18:34 GMT   |   Update On 2019-04-08 18:34 GMT
தென்ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக குரூகர் தேசியப் பூங்காவிற்கு சென்ற நபர் சிங்கங்களுக்கு இரையானார். #SouthAfrica #RhinoPoacher
கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் குரூகர் தேசியப் பூங்கா உள்ளது.

இங்குள்ள காண்டாமிருகங்களை சட்டவிரோதமாக வேட்டையாடி அதன் கொம்புகளை கடத்தி விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு ஆசிய நாடுகளில் அதிக பணம் கிடைக்கிறது.

இந்த நிலையில், லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த 5 பேர் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக குரூகர் தேசியப் பூங்காவுக்கு சென்றனர்.

அப்போது அவர்களில் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை யானை காலால் மிதித்து நசுக்கி கொன்றது. பின்னர் அவரது உடலை சிங்கக் கூட்டம் ஒன்று இழுத்து சென்றது.

இதையடுத்து, அவருடன் வந்திருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று, வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, கொல்லப்பட்டவரின் மண்டையோடு மட்டுமே கிடைத்தது. அவரது உடல் முழுவதையும் சிங்கங்கள் தின்றுவிட்டன.

இறந்தவரின் உறவினர்களுக்கு தேசியப் பூங்கா அதிகாரிகள் தங்களின் இரங்கலை தெரிவித்தனர்.
Tags:    

Similar News