செய்திகள்

பாகிஸ்தானில் இரு இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் - விசாரணைக்கு இம்ரான் கான் உத்தரவு

Published On 2019-03-24 09:08 GMT   |   Update On 2019-03-24 10:11 GMT
பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். #ImranKhanorders #forcedconversion #forcedmarriage #teenageHindugirls
இஸ்லாமாபாத்:

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர்.

பின்னர்,  ரவீனா(13), ரீனா(15) ஆகிய அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர்.



இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் சவுத்ரி இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். #ImranKhanorders #forcedconversion #forcedmarriage  #teenageHindugirls
Tags:    

Similar News