செய்திகள்

மொசம்பிக் நாட்டை துவம்சம் செய்த இடாய் புயல் - பலி எண்ணிக்கை 417 ஆக உயர்வு

Published On 2019-03-23 13:26 GMT   |   Update On 2019-03-23 13:26 GMT
மொசம்பிக் நாட்டை துவம்சம் செய்த இடாய் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் மேலும் 250 மக்கள் பலியாகினர். #Mozambiquecyclone #CycloneIdai
பெய்ரா:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த வாரம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில்  ‘இடாட் புயல்’ தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன.

அருகாமையில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியை இந்த கோரப்புயல் பதம் பார்த்தது.

இந்த புயலின் தாக்கத்தால் மொசாம்பிக் நாட்டின் சில பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

புயலை தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஏற்கனவே வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மொசாம்பிக் நாட்டில்  மட்டும் இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

பல பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் மெல்ல வடிந்துவரும் நிலையில்  ‘இடாட் புயல்’ மற்றும் மழை, வெள்ளம் பாதிப்புக்கு மொசம்பிக் நாட்டில் மட்டும் 417 உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. அருகாமையில் இருக்கும் கிழக்கு ஜிம்பாப்வே பகுதியில் சுமார் 250 பேர் பலியானதாகவும் ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். #Mozambiquecyclone #CycloneIdai 
Tags:    

Similar News