செய்திகள்

ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த ஷமீமா நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும்- தந்தை வேண்டுகோள்

Published On 2019-02-26 05:58 GMT   |   Update On 2019-02-26 05:58 GMT
சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷமீமா பேகத்தினை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். #ISISMillitants #ShamimaBegam
லண்டன்:

லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். மூவரும் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு  2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.

அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர் ஆவார்.

இதற்கிடையே அகதிகள் முகாமில் ‌நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்ததாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து  ஷமீமா பேகத்தின் தந்தை அலி கூறியிருப்பதாவது:

ஷமீமாவின் குடியுரிமையை ரத்து செய்வது முறையான நடவடிக்கை அல்ல. தவறு செய்வது மனிதர்களின் இயல்பு. நாம் அனைவரும் தவறுகள் செய்கிறோம். என் மகளின் இந்த செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஷமீமா தானாக சிரியாவிற்கு செல்ல முற்படவில்லை. ஐஎஸ் இயக்கத்தில் இணைய மூளை சலவை செய்யப்பட்டுள்ளது. தவறான வழிகாட்டுதலால் இவ்வாறு செய்துவிட்டாள்.  முன்னதாக குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் ஷமீமா இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஷமீமா பேகத்தை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும். அவள் தவறு செய்திருந்தால் நாட்டிற்கு அழைத்து வந்து, அதன்பிறகு  விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #ISISMillitants #ShamimaBegam  

Tags:    

Similar News