செய்திகள்

பிரதமர் மோடி அருணாச்சலப்பிரதேசம் சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு

Published On 2019-02-09 10:52 GMT   |   Update On 2019-02-09 10:52 GMT
சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Chinaopposes #ModiArunachalvisit
பீஜிங்:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒண்றான அருணாச்சலப்பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதி எல்லையாக சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக பல ஆண்டுகளாக இந்தியா-சீனா உயர்மட்ட அதிகாரிகளிடையே 21 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையிலான 3488 எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இந்தியாவை சேர்ந்த தலைவர்கள் செல்லும் போதெல்லாம் சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது. இந்தியா-சீனாவின் எல்லைப்பகுதியில் எங்கள் நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள இந்த இடத்துக்கு இந்திய தலைவர்கள் வரும்போதெல்லாம் எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

இருநாடுகளுக்கு இடையிலான பொது விவகாரங்களை கருத்தில் கொண்டும் சீன அரசின் அக்கறைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எல்லைப்பகுதியில் பதற்றத்துக்குரிய சர்ச்சைகளை தவிர்க்கும் வகையிலும்  இதுபோன்ற செயல்களில் இருந்து இந்திய தலைவர்கள் விலகியிருக்க வேண்டும்’ என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளார். #Chinaopposes #ModiArunachalvisit
Tags:    

Similar News