செய்திகள்

நான்காவது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசினாவுக்கு மோடி வாழ்த்து

Published On 2018-12-31 07:30 GMT   |   Update On 2018-12-31 07:30 GMT
வங்காளதேசம் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று நான்காவது முறை பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். #PMModi #BangladeshPM #Hasina
டாக்கா:

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் 287 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
 
கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில்,  நான்காவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.



இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆளும்கட்சியின் முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர வேண்டும் என உங்கள் நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர் என குறிப்பிட்ட மோடி, வங்காளதேசத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

முதல் வெளிநாட்டு தலைவராக வாழ்த்து தெரிவித்த மோடிக்கும், தங்கள் நாட்டுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளுக்காகவும் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்ததாக வங்காளதேசம் பிரதமரின் செய்தித்துறை செயலாளர் இஹ்சானுல் கரீம் குறிப்பிட்டுள்ளார். #PMModi #BangladeshPM #Hasina
 
Tags:    

Similar News