செய்திகள்

ஜனாதிபதி சிறிசேனாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது - முன்னாள் தளபதி சரத்பொன்சேகா ஆவேசம்

Published On 2018-12-06 06:27 GMT   |   Update On 2018-12-06 06:27 GMT
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மனநிலை பாதித்துவிட்டதால் பைத்தியக்காரர் போல் நடந்து கொள்கிறார் என்று முன்னாள் தளபதி சரத்பொன்சேகா கூறி உள்ளார். #Sirisena #SarathFonseka
கொழும்பு:

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜ பக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார்.

ஆனால், ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. கோர்ட்டு அவர் பிரதமர் பதவியை தொடருவதற்கு தடை விதித்துள்ளது.

இதனால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமர் இல்லாமல் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

இதில், அதிபர் சிறிசேனா எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி கொண்டு இருக்கிறார்.



இது சம்பந்தமாக முன்னாள் ராணுவ தளபதியும், எம்.பி.யும் ஆன சரத் பொன்சேகா கூறியதாவது:-

அதிபர் சிறிசேனா இரவில் ஒன்று பேசுகிறார். விடிந்ததும் வேறு ஒன்றை பேசுகிறார். அவருடைய மனநிலை பாதித்து விட்டது. பைத்தியக்காரர் போல் நடந்து கொள்கிறார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபர், அரசு தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் பதவி ஏற்பதற்கு முன்பு மனநிலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று விதிகள் இருக்கிறது.

அதே போல் இலங்கையிலும் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் அதிபர் சிறிசேனா 2 வாரம் மனநல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரலாம்.

இதற்கு தேவை என்றால் சட்ட திருத்தங்களை கூட உருவாக்கலாம். சிறிசேனா தொடர்ந்து அரசியல் சாசன சட்டத்தை மீறி வருகிறார்.

என்னை அதிபர் ஆக்கி இருந்தால் இது போன்று ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன். அரசியல் சட்டத்தை மீற மாட்டேன்.

யாரோ எழுதி கொடுத்த புத்தகத்தை ஜனாதிபதி தாத்தா என்ற பெயரில் தனது பேத்தியை வைத்து வெளியிடுகிறார். அப்படிப்பட்ட நபர் தான் இங்கு அதிபராக இருக்கிறார்.

இவ்வாறு பொன்சேகா கூறினார்.  #Sirisena #SarathFonseka
Tags:    

Similar News