செய்திகள்

தரையிறங்கும்போது ரன்வேயில் மோதிய விமானம்- அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

Published On 2018-11-23 10:31 GMT   |   Update On 2018-11-23 10:31 GMT
பொலிவியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது லேண்டிங் கியர் உடைந்ததால் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. எனினும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. #PlaneSkidsOffRunway #BolivianAirport
லா பாஸ்:

பெரு நாட்டின் கஸ்கோ நகரில் இருந்து நேற்று ஒரு பயணிகள் விமானம் பொலிவியா தலைநகர் லா பாஸ்க்கு புறப்பட்டு வந்தது. அதில் 122 பயணிகளும், 5 ஊழியர்களும் இருந்தனர்.

விமானம் லா பாசில் உள்ள எல் ஆல்டோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது லேண்டிங் கியர் உடைந்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சறுக்கிக்கொண்டு ஓடுதளத்தில் ஒடியது. அதிக உராய்வு காரணமாக டயர் வெடித்தது. பின்னர் சிறிது தூரம் சென்றதும் தரையில் மோதியபடி விமானம் நின்றது. விமானத்திற்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

ஆனால், இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 122 பயணிகளுக்கும், 5 விமான ஊழியர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். டயர் வெடித்து விட்டதால் கிரேன் கொண்டு வரப்பட்டு விமானம் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த விபத்து காரணமாக ஓடுதளம் உடனடியாக மூடப்பட்டு, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #PlaneSkidsOffRunway #BolivianAirport
Tags:    

Similar News