செய்திகள்

சகோதரர் கைது எதிரொலி - அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார் நவாஸ் ஷெரீப்

Published On 2018-10-08 21:10 GMT   |   Update On 2018-10-08 21:10 GMT
ஊழல் வழக்கில் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். #NawazSharif #ShahbazSharif
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித்தலைவருமான நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் மனைவியின் மரணத்துக்காக பரோலில் வந்தார். பின்னர் அவருக்கு கடந்த மாதம் 19-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.



முன்னதாக தனது மனைவியின் உடல் நலக்குறைவு மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட காரணங்களால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார். நவாஸ் ஷெரீப்பின் கட்சிப்பணிகளை அவரது சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப்பும் ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 நாள் காவல் விதிக்கப்பட்டது. இதனால் உரிய தலைமையோ, வழிகாட்டுதலோ இன்றி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் தவித்தனர். எனவே சுமார் 4 மாதங்களுக்குப்பின் நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். இதில் முதல் நிகழ்வாக கட்சியின் மத்திய செயற்குழுவை அவசரமாக கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே அவர் மீது போடப்பட்டு இருந்த தேசத்துரோக வழக்கு ஒன்று லாகூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அவர் கோர்ட்டில் ஆஜரானார்.  #NawazSharif #ShahbazSharif
Tags:    

Similar News