செய்திகள்

அமெரிக்கா - புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

Published On 2018-09-15 21:16 GMT   |   Update On 2018-09-15 21:16 GMT
அமெரிக்காவின் கரோலினாவில் புளோரன்ஸ் புயல் தாக்கியதால் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. #HurricaneFlorence
வாஷிங்டன்:

அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.
 
வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின.



புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு கரோலினாவின் டப்ளின் கவுண்டி பகுதியில் 3 பேர் மழையில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், வடக்கு கரோலினாவில் 5 பேர் பலியாகினர்.
இதேபோல் தெற்கு கரோலினாவில் புயல் பாதிப்பில் சிக்கி ஒருவர் பலியானார்.

புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் பல ஆயிரம் பேர் அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #HurricaneFlorence
Tags:    

Similar News