செய்திகள்

எங்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பெருந்துணையாக இருந்தவர் வாஜ்பாய் - இலங்கை ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்

Published On 2018-08-17 10:25 GMT   |   Update On 2018-08-17 10:25 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இலங்கையின் நிரந்தரத்தன்மைக்கு பெருந்துணையாக இருந்தவர் என அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
கொலும்பு:

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மிக மூத்த அரசியல் தலைவருமான வாஜ்பாய் தனது 93-வது வயதில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வாஜ்பாயின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் நெடுஞ்சாலை மற்றும் உயர்க்கல்வித்துறை மந்திரி லக்‌ஷ்மன் கிரியெல்லா டெல்லி வந்துள்ளார்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அவர் பெருந்துணையாக இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

வாஜ்பாயின் மறைவுக்கு விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இலங்கையின் உண்மையான நண்பராக விளங்கிய திரு.வாஜ்பாயின் மரண செய்தி அறிந்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன்.

2002-2004 ஆண்டுகளில் நான் பிரதமராக இருந்தபோது,  இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.  அந்த உயர்ந்த மனிதருடன் நான் கொண்டிருந்த நட்பை எனது நினைவு கருவூலத்தில் என்றென்றும் பாதுகாத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

‘மிக உயர்ந்த மனித நேயரும், இலங்கையின் உண்மையான நண்பருமான வாஜ்பாயை நாம் இன்று இழந்துள்ளோம். ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கிய முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரும் தலைவராக திகழ்ந்தவர்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், மற்றும் உலகம் முழுவதும் உள்ள வாஜ்பாயின் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee  #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
Tags:    

Similar News