செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி - துருக்கி அதிபர் அதிரடி

Published On 2018-08-15 19:43 GMT   |   Update On 2018-08-15 19:43 GMT
அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள், மதுபானங்கள், புகையிலை மீதான வரியை உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #Turkey #Import
அங்காரா:

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில் அடைத்து உள்ளது.

அவரை நாடு கடத்துமாறு அமெரிக்கா விடுத்து உள்ள கோரிக்கையை துருக்கி நிராகரித்து விட்டது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன்காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியம் மீது 2 மடங்கு வரி விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி அதிபர் எர்டோகன், அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

துருக்கி பொருளாதாரத்தின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக துருக்கி துணை அதிபர் புவாட் ஒக்டாய் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றின்மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்து உத்தரவு போட்டு உள்ளது. 
Tags:    

Similar News