செய்திகள்

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் - 32 பேர் பலி

Published On 2018-07-25 07:05 GMT   |   Update On 2018-07-25 08:01 GMT
சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.

உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் இன்று பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதில், 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வேடியா நகரில் தற்கொலைப்படையை சேர்ந்த 3 பேர் தொடர் தாக்குதல் நடத்தினர். மேலும், அப்பகுதிக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இதே போல் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News