செய்திகள்

அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் - துருக்கி அதிபருக்கு டிரம்ப் வேண்டுகோள்

Published On 2018-07-19 06:05 GMT   |   Update On 2018-07-19 06:05 GMT
ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என துருக்கி அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். #USPastor #Trump #PastorInTurkishJail
வாஷிங்டன்:

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் ஆன்ட்ரு ப்ருன்சன். பாதிரியாரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கி நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயிப் எர்டோகன் அரசை கவிழ்க்க நடந்த புரட்சியின்போது கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக ஆன்ட்ரு ப்ருன்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

பாதிரியார் மீது ஆட்சியை கவிழ்க்க சதி, பயங்கரவாதிகளை ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போதும் அவரை ஜாமினில் விடுவிக்க மறுத்த நீதிமன்றம், மறுவிசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



இந்நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ ப்ருன்சனை துருக்கி அதிபர் எர்னோகன் விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘சிறையில் இருந்து மரியாதைக்குரிய பாதிரியார் ஆண்ட்ரூ ப்ருன்சனை விடுவிக்காதது பெரிய அவமதிப்பு ஆகும். நீண்டகாலம் அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வதற்கு எர்டோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிரியார் எந்த தவறும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினருக்கு அவர் தேவை’ என டிரம்ப் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். #USPastor #Trump #PastorInTurkishJail
Tags:    

Similar News