செய்திகள்

பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - அவாமி தேசிய கட்சி பிரமுகர் உள்பட 14 பேர் பலி

Published On 2018-07-10 20:32 GMT   |   Update On 2018-07-11 06:53 GMT
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உடல் சிதறி பலியாகினர். #Pakistan #SuicideAttack
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

இந்த திடீர் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
 
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மிட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Pakistan #SuicideAttack
Tags:    

Similar News