செய்திகள்

மக்கள் ஆதரவால் மரண தண்டனையில் இருந்து தப்பிய ஐரோப்பிய கர்ப்பிணி பசு

Published On 2018-06-14 04:02 IST   |   Update On 2018-06-14 04:02:00 IST
பல்கேரியாவை சேர்ந்த பென்கா என்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #savepenka #Serbia #BulgarianCow

பெல்கிரேட்:

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் சில நாட்களில் பிரசவிக்க உள்ளது. 

இதனிடையே மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது. அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு. ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும். 

இதனால் ஐரோப்பிய அதிகாரிகள் கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு, மரண தண்டனை விதித்தனர். அந்த பசு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்லை தாண்டிய பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில் பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டது.  
பசு கர்ப்பமாக இருப்பதால் அதனை கொல்வதற்கு பல்கேரியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பசுவை காப்பாற்றக்கோரி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரபலங்களும், விலங்கின ஆர்வலர்களும் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர். #SAVEPENKA என்ற ஹேஸ்டேக்கில், உலக அளவில் சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு, பென்காவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது. இதனிடையே பசுவுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #savepenka #Serbia #BulgarianCow
Tags:    

Similar News