செய்திகள்
நேபாளத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலி
நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் பறந்த சிறியரக விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். #NepalPlaneCrash
நேபாள நாட்டின் சிமிகோட் பாஸ் மாகாணத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுர்க்ஹெட் விமானதளத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு காலை 6.12 மணியளவில் பறந்து சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த விமானி கிரன் பட்டாராய் மற்றும் துணை விமானி அதித்யா நேபாளி ஆகியோர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய துணை இயக்குநர் ஜெனரல் போக்ரேல் கூறியதாவது:-
விபத்துக்குள்ளான மகலு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. மேலும், வானிலை மோசமாக இருந்த காரணத்தினால் சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தை இயக்கிச்சென்ற இரண்டு விமானிகளும் விபத்தில் பலியாகியுள்ளனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள பஹுங்ஹார் ஆற்றங்கரையில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #NepalPlaneCrash