செய்திகள்

பயங்கரவாத தாக்குதலுக்கு துணைபோன ஆஸ்திரேலியருக்கு 44 ஆண்டு சிறை

Published On 2018-03-01 23:57 GMT   |   Update On 2018-03-01 23:57 GMT
பயங்கரவாதத்துக்கு துணை போனதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலியருக்கு 44 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015-ம் ஆண்டு ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் கர்ட்டிஸ் செங் (வயது 58) என்ற போலீஸ் துறை ஊழியர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை நடத்தியவர் ஒரு 15 வயது சிறுவன்.

சிட்னியில் உள்ள மசூதி ஒன்றில் 2015-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அந்த சிறுவனை சந்தித்து, பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு கைத்துப்பாக்கி வழங்கியவர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராபன் அலாவ் (20) ஆவார்.

இதுதொடர்பாக ராபன் அலாவ் மீது ஆஸ்திரேலிய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை நியூசவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.

விசாரணையின்போது ராபன் அலாவ், தன் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் குற்றவாளி என்று கண்டுகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு 44 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

பயங்கரவாதத்துக்கு துணை போனதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலியர் ஒருவர் தண்டிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.

44 ஆண்டுகள் சிறைவாசத்தின்போது, முதல் 33 ஆண்டுகள் அவருக்கு ‘பரோல்’ வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News