செய்திகள்

மாலி நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 4 வீரர்கள் பலி

Published On 2017-11-25 09:02 GMT   |   Update On 2017-11-25 09:02 GMT
மாலி நாட்டின் இரு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.
பமாகோ:

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் உள்ள ஜிஹாதிகள் போராட்டக் குழு மற்றும் டுவாரெக் புரட்சியாளர்கள் குழுவில் கட்டுப்பாட்டில் இருந்துவந்த வடக்கு மாலியில் பிரான்ஸ் தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் இந்த தீவிரவாதக் குழுவினர் அனைவரும் கடந்த 2013-ம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்டனர்.

எனினும், சமீபகாலமாக இந்த குழுவினரின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பிரபல அரசியல்வாதிகள், மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் தங்கியிருக்கும் இடங்களின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தும் சில தீவிரவாதக் குழுவினர், பொதுமக்களில் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து, ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றனர்.

இந்நிலையில், மாலியில் தீவிரவாதச் செயல்களை ஒழிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பிரசாரம் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான அமைதிப்படையினர் மாலியில் முகாமிட்டுள்ளனர்.



நைஜீரியா நாட்டு எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள மேனகா நகரில் வழக்கம்போல் இந்த அமைதிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை வழிமறித்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை சேர்ந்த 3 வீரர்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

இதேபோல், மாலி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மோப்டி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர்.

Tags:    

Similar News