செய்திகள்

நேபாளம்: பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

Published On 2017-10-28 18:08 GMT   |   Update On 2017-10-28 18:08 GMT
நேபாளத்தில் காத்மாண்டு நகரில் ஓடும் திரிசூல் ஆற்றில் பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
காத்மண்டு:

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து ராஜ்பிராஜ் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 50க்கு மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த பேருந்து டாடிங் மாவட்டத்தின் கட்பேசி கஞ்சேமோடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கு ஓடிக் கொண்டிருந்த திரிசூல் ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.



இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்களைக் காப்பாற்றும்படி அலறினர். சிறிது நேரத்தில் பேருந்து ஆற்றில் மூழ்கியது.  இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நேபாள நாட்டு ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 26 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 16 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 31 பேர் பலியானதாக மீட்பு குழுவில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் பெரும்பாலும் சப்திரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார் அவரது பெயர் மமதா தேவி தாகூர் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News