செய்திகள்
வடகொரியாவில் 3.4 ரிகடர் அளவில் நிலநடுக்கம் - அணுஆயுத சோதனையால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்
வடகொரியாவில் இன்று, 3.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் அணுஆயுத சோதனையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சீனா நில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பீஜிங்:
வடகொரியாவில் இன்று காலை சுமார் 8:30 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா நில அராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பூகம்பம் முன்னர் அந்நாடு அணுஆயுத சோதனைகள் நடத்திய அதே இடத்தில் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் வடகொரியா அந்த இடத்தில் மீண்டும் அணுஆயுத சோதனையோ, ஹைட்ரஜன் குண்டு சோதனையோ நடத்தியிருக்கக்கூடும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் முதல்கட்ட ஆராய்ச்சியில் இந்த பூகம்பம் இயற்கையாக ஏற்பட்டதாக கூறியுள்ளது. இதற்கு முந்தைய சோதனையினால் ஏற்பட்ட நிலநடுக்கத்தைவிட இந்த நிலநடுக்கம் குறைந்த அளவுடையது என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அணுஆயுத சோதனையால் ஏற்பட்டது என தெரியவரும் பட்சத்தில் அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அணுஆயுத சோதனைகள் நடத்தினால் வடகொரியாவை முழுமையாக அழிக்க நேரிடும் என டிரம்ப் சமீபத்தில் மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.