செய்திகள்

லண்டன்: மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு - 19 பேர் பலி

Published On 2017-05-23 03:33 GMT   |   Update On 2017-05-23 03:33 GMT
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று இரவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
லண்டன்:

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 10.33 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததில், அங்கு குழுமியிருந்த 19 பேர் உயிரிழந்ததாக லண்டன் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து மான்செஸ்டர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து மோடி தெரிவித்ததாவது,

"மான்செஸ்டர் தாக்குதல் தன்னை மனதளவில் பாதித்ததாகவும், தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியிருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல்களை தெரிவித்த மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக தான் பிரார்த்திக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News