செய்திகள்

வலுக்கட்டாயமாக இழுத்து பயணி வெளியேற்றம்: அமெரிக்க விமான நிறுவன அதிகாரி மன்னிப்பு கேட்டார்

Published On 2017-04-12 05:35 GMT   |   Update On 2017-04-12 05:35 GMT
அமெரிக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் பயணியை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றியதற்காக விமான நிறுவன அதிகாரி மன்னிப்பு கேட்டார்.
சிகாகோ:

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஓஹாரி விமான நிலையத்தில் இருந்து யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. அப்போது இருக்கைகளை விட அதிக எண்ணிக்கையில் பயண சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனவே 4 பேர் விமானத்தில் இருந்து இறங்க வேண்டும் என விமான பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் யாரும் இறங்க முன்வரவில்லை. எனவே அவர்களாகவே தேர்வு செய்து பயணிகளை இறக்கி விட்டனர். அவர்களில் ஒருவர் சீன வம்சாவளியை சேர்ந்த டேவிட் தயோ (69).

கென்டக்கியில் உள்ள எலிசாபெத்டவுன் பகுதியை சேர்ந்தவர். இவர் ஒரு டாக்டர் ஆவார். தனது நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அவசரமாக செல்ல வேண்டியுள்ளதால் கீழே இறங்க முடியாது என மறுத்தார்.


எனவே, அவரை விமான பணியாளர்கள் தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். இக்கொடூர செயல் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

பணியாளர்களின் செயலுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆஸ்கர் முனோஷ் மன்னிப்பு கேட்டார்.

“இறங்க மறுத்த பயணிக்கு பணியாளர்கள் வழங்கிய தண்டனை கடுமையானது. இனி இது போன்று மீண்டும் நடக்காது. மறுப்பு தெரிவித்து பயணி சண்டையிடும் போது அவரை சிகாகோ விமான பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பணியாளர்கள் வெளியேற்றி இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Similar News