செய்திகள்

நேபாள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மாதேசி முன்னணி திரும்பப் பெற்றது

Published On 2017-03-15 10:21 GMT   |   Update On 2017-03-15 11:58 GMT
நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மாதேசி இனத்தவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை எனக் கூறி ஆளும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மாதேசி முன்னணி கட்சி இன்று திரும்பப் பெற்றது.
காத்மண்டு:

நேபாள நாட்டில் இந்திய வம்சாவளி இனத்தவரான மாதேசிகள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்நாட்டின் புதிய அரசியலமைப்பில் மாதேசிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை எனக் கோரி அவர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அந்நாட்டில் வரும் மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதையும் மாதேசிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.



கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாதேசிகளின் நடத்திய போரட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர். போலீசார் நடத்திய தாக்குதல் மாதேசி இனத்தவர்களை இன்னும் கோபமடையச் செய்தது. இந்நிலையில், பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதாக மாதேசி முன்னணி கட்சி இன்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், 601 பேர் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் ஆளும் மாவோயிஸ்டு கட்சிக்கு, முக்கிய கட்சியான நேபாளி காங்கிரசின் ஆதரவு இருப்பதால் மாதேசி முன்னனி ஆதரவை திரும்பப் பெற்றாலும் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை.

Similar News