செய்திகள்

தடையை மீறி 50 வடகொரியர்களை நாடு கடத்துகிறது மலேசியா

Published On 2017-03-14 16:24 GMT   |   Update On 2017-03-14 16:24 GMT
மலேசியாவில் இருந்து வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் வெளியேற தடை இருந்தபோதிலும், தற்போது 50 தொழிலாளர்களை நாடு கடத்த மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
கோலாலம்பூர்:

வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் கடந்த மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.


இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு 2 பெண்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பல வடகொரியர்களை மலேசிய காவல்துறை தேடி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாட்டு தூதர்களும் பரஸ்பரம் வெளியேற்றப்பட்டனர். மலேசியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வடகொரியா தடை விதித்துள்ளது. இதேபோன்று வட கொரிய மக்கள் வெளியேற மலேசியா தடை விதித்துள்ளது. மலேசியாவின் விசாரணையையும் வடகொரியா விமர்சித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், விசா காலம் முடிந்து தங்கியிருக்கும் வடகொரியாவைச் சேர்ந்த 50 பேரை நாடு கடத்த மலேசியா அரசு முடிவு செய்துள்ளது. வடகொரிய மக்கள் வெளியேறுவதற்கு தடை இருந்தபோதும், போர்னியோ தீவில் உள்ள சராவக் மாநிலத்தில் பணியாற்றும் 50 வடகொரிய தொழிலாளர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி தெரிவித்தார். ஆனால், இந்த முடிவு எடுத்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

Similar News