செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலை

Published On 2017-03-04 13:46 IST   |   Update On 2017-03-04 13:46:00 IST
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர், ஹர்னிஷ் பட்டேல்(43). இந்திய வம்சாவளியினரான இவர், இங்குள்ள லான்சஸ்டர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தியவாறு, கடையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பின்னிரவு சுமார் 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்று பகல் வேளை) லான்சஸ்டர் பகுதி போலீசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அங்குள்ள கடை வாசலில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துக் கிடப்பதாக எதிர்முனையில் பேசிய குரல் தெரிவித்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹர்னிஷ் பட்டேலின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராகவும், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் உள்பட அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவராகவும் இருந்து வந்த அவரது மரணம் பலரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவசரம் மற்றும் நெருக்கடியான காலங்களில் தானாகவே முன்வந்து, பிறருக்கு உதவும் தாராளமனம் கொண்டவராக இருந்த அவருக்கு எதிரிகள் என்று யாரும் இருந்திருக்கவே முடியாது என ஹர்னிஷ் பட்டேலின் நண்பர்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் இந்தியாவை சேர்ந்த என்ஜினீயரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.



அந்த அதிர்ச்சியில் இருந்து அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் ஒருவர் அமெரிக்கர்களின் இனவெறிக்கு இரையாகி இருப்பது, வேதனைப்படத்தக்கதும், குறிப்பிடத்தக்கதும் ஆகும்.

Similar News