செய்திகள்

இத்தாலி: மத்திய தரைக்கடலில் சிக்கி தவித்த 1000 அகதிகள் மீட்பு

Published On 2017-01-28 06:57 GMT   |   Update On 2017-01-28 06:57 GMT
மத்திய தரைக்கடலில் சிக்கி தவித்த சுமார் ஆயிரம் வெளிநாட்டு அகதிகளை இத்தாலி நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
ரோம்:

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 21 லட்சத்தை எட்டியுள்ளது.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர்.

அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே அகதிகளாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.

எனவே, ரத்தத்தை உறையவைக்கும் குளிர் காற்று, பசியால் அலையும் சுறா, திமிங்கலம் உள்ளிட்ட ராட்சத மீன்களின் தாக்குதல் மற்றும் பேரலைகளுக்கு மத்தியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து இவர்கள் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், இத்தாலிக்குள் நுழையும் நோக்கத்தில் மூன்று மரக்கலங்கள் மற்றும் ஆறு ரப்பர் படகுகளில் வந்த சுமார் ஆயிரம் அகதிகளை இத்தாலி நாட்டு கடலோரக் காவல் படையினர் மற்றும் ஸ்பெயின் நாட்டு மனிதநேய பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மீட்டதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு படகில் பிரேதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
 
இதைப்போன்ற ஆபத்தான கடல் பயணங்களின் மூலம் கடந்த 2015-ம் ஆண்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,777 ஆக உள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டில் சுமார் 5000 குடியேறிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆபத்துகளை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இத்தாலி நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News