செய்திகள்

வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை: செயற்கை கோள் ஏவ நடவடிக்கை

Published On 2016-09-21 02:24 GMT   |   Update On 2016-09-21 04:45 GMT
வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, விரைவில் செயற்கைக்கோள் ஏவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சியோல்:

வடகொரியா 5-வது முறையாக கடந்த 9-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நடுத்தர ஏவுகணையில் அணுகுண்டை இணைத்து செலுத்தும் திறனை அடைந்திருக்கிறோம் என வடகொரியா அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ராக்கெட் என்ஜின் சோதனை ஒன்றை களத்தில் நடத்தி, அதில் வெற்றி கண்டிருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இந்த சோதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் நடந்திருக்கிறது.

ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, விரைவில் செயற்கைக்கோள் ஏவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி விஞ்ஞானிகளுக்கும், என்ஜினீயர்களுக்கும் அவர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே வடகொரியாவின் 5-வது அணுகுண்டு சோதனை தொடர்பாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரச்சினை எழுப்புவதில் இணைந்து செயல்பட அமெரிக்காவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

Similar News