செய்திகள்

ஜியோவை ஓரங்கட்ட புதிய தொழில்நுட்பம்: மும்மடங்கு வேகத்தில் 4ஜி வழங்க தயாராகும் ஏர்டெல்

Published On 2017-09-27 12:33 IST   |   Update On 2017-09-27 12:34:00 IST
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்சமயம் இருப்பதை விட அதிவேக 4ஜி வேகத்தை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி: 

இந்தியாவில் முதல் முறையாக மேசிவ் மல்டிப்பிள்-இன்புட் மல்டிப்பிள்-அவுட்புட் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் 5ஜி தொழில்நுட்பத்திற்கான முண்ணோட்டம் என்றும் கூறலாம். இந்தியாவில் எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய ஏர்டெல் நிறுவனம் தற்போதே தயாராகியுள்ளது. 

ஏர்டெல் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரங்களில் துவங்கப்பட்டு அதன்பின் மற்ற நகரங்களில் துவங்கப்படும். பிராஜக்ட் லீப் எனப்படும் ஏர்டெல் நெட்வொர்க் மாற்றம், மேசிவ் MIMO தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் அளவினை ஐந்தில் இருந்து ஏழாக அதிகரிக்கும். 

இது ஸ்பெக்ட்ரல் திறனை அதிகரிக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தும் வழக்கமான 4ஜி வேகத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வேகத்தை பெற முடியும். இந்த சேவையை பயன்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எவ்வித கூடுதல் கட்டணமோ அல்லது ஸ்மார்ட்போன் அப்கிரேடுகளையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.   



எவ்வித கட்டிடங்கள், உள்புறங்கள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகளிலும் சீரான மற்றும் அதிவேக இணையத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். பல்வேறு வாடிக்கையாளர்கள், பல்வேறு சாதனங்களில் எவ்வித சிரமமும் இன்றி ஹாட்ஸ்பாட் கொண்டு பயன்படுத்த முடியும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மேசிவ் MIMO தொழில்நுட்பம் 3D பீம்களை வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் பரவலான மற்றும் செங்குத்தாகவும் பரப்பும். இதனால் நெட்வொர்க் சிக்னல்கள் சீராக பரவுவதோடு, எவ்வித இடர்பாடுகளும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். சிக்னல் தரம் மேம்படுத்தப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும். 

Similar News