துர்க்கைராஜ் - நாராயணசாமி
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பைனான்சியரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது
- சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக இருந்ததை நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர்.
- சுகுமார் மிரட்டல் குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்:
பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தை சேர்ந்த துர்க்கைராஜ் (45).
சுகுமாரிடம் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி ராணிசித்ரா (40) என்பவர் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தார். சுகுமாரிடம் பணம் நிறைய இருப்பதை பார்த்து அதனை அபகரிக்க முடிவு செய்தார். அதன்படி அடிக்கடி ராணிசித்ரா வீட்டிற்கு சுகுமாரை வரவழைத்து அங்கு மது குடித்து ஒன்றாக இருந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக இருந்ததை நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை சுகுமாரிடம் காட்டி ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் இந்த வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார் இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராணிசித்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து பணம் கேட்டு மிரட்டியது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் இவர்கள் இதேபோல வேறு சிலரிடமும் மது குடிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ராணிசித்ரா நிலக்கோட்டை சிறையிலும், துர்க்கைராஜ், நாராயணசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.