தமிழ்நாடு செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார்: அடுத்த வாரம் எம்.பி.க்களுடன் சந்திப்பு

Published On 2025-08-23 12:26 IST   |   Update On 2025-08-23 12:26:00 IST
  • துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டும் பணிகள் சூடு பிடித்துள்ளன.
  • அடுத்த கட்டமாக மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

சென்னை:

துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 9-ந்தேதி டெல்லி பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டு உள்ளார்.

வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்ட தொடங்கி உள்ளனர். இந்தியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நாளை (ஞாயிறு) சென்னை வருகிறார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழர் என்பதால் கட்சி பேதமில்லாமல் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் அந்த வேண்டுகோளை தி.மு.க. நிராகரித்து விட்டது. இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கப் போவதாக அறிவித்து விட்டது.

இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முதல் ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரையும் அவர்களது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசி தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.

மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, நட்டா ஆகியோரது வீட்டுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்று பேசினார். அப்போது அவருடன் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்தே உடன் சென்று இருந்தார்.

வினோத் தவ்தே துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே சி.பி.ராதாகிருஷ்ணனை உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. எம்.பி.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேச எம்.பி.க்களுடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசி தங்களது ஆதரவை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இன்றும் டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக அவர் சில மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னைக்கு வர முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் ஆதரவு திரட்ட வருவாரா? என்ற கேள்வி முதலில் எழுந்தது. எனவே சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக வருகை சந்தேகமாகவே இருந்தது.

ஆனால் அடுத்த வாரம் அவர் தமிழ்நாட்டுக்கு வர இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றி பா.ஜ.க. தரப்பில் கூறும் போது, சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த வாரம் சென்னை வருவது உறுதியாகி உள்ளது. தேதி மட்டும் இன்னும் உறுதியாகவில்லை என்றனர்.

சென்னையில் அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோருவார் என்றும், வேறு யார் யாரை சந்திப்பார் என்ற தகவல் தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டும் பணிகள் சூடு பிடித்துள்ளன. இந்த தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் நேரில் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

அதுபோல இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் அவரது சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News