தமிழ்நாடு செய்திகள்

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி - வைரமுத்து

Published On 2025-06-23 09:28 IST   |   Update On 2025-06-23 09:28:00 IST
  • "வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்" கலங்குகிறது உலகு
  • போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உலகின் தலையில்

மெல்லிய இழையில்

ஆடிக்கொண்டிருக்கிறது

அணுகுண்டு

"வக்கிர மனங்களால்

உக்கிரமாகுமோ யுத்தம்"

கலங்குகிறது உலகு

ஈரானின்

அணுசக்தித் தளங்களில்

டொமாஹக் ஏவுகணைகள்வீசி

அவசரப்பட்டுவிட்டது

அமெரிக்கா

வல்லரசுகள்

நல்லரசுகள் ஆகாவிடில்

புல்லரசு ஆகிவிடும்

பூமி

தான் கட்டமைத்த நாகரிகத்தைத்

தானே அழிப்பதன்றி

இதுவரை போர்கள்

என்ன செய்தன?

போரிடும் உலகத்தை

வேரொடு சாய்ப்போம்

அணுகுண்டு முட்டையிடும்

அலுமினியப் பறவைகள்

அதனதன் கூடுகளுக்குத்

திரும்பட்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News