தமிழ்நாடு செய்திகள்

விடுமுறை எதிரொலி: திம்பம் மலைப்பாதையில் ஒரே நேரத்தில் வாகனங்கள் குவிந்ததால் நெரிசல்

Published On 2025-08-30 10:11 IST   |   Update On 2025-08-30 10:11:00 IST
  • திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
  • திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை தொடங்குகிறது.

திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.

அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த சில நாட்களாகவே திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை விடுமுறையை ஒட்டி திம்பம் மலைப்பகுதி சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

இன்று காலை 6 மணி முதல் திம்பம் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், கரும்பு ஏற்றி சென்ற லாரிகள் என ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் திம்பம் மலைப்பகுதியில் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் வாகனம் வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப்பகுதியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் இருப்பதால் மேற்கொண்டு நகராமல் வாகனங்கள் அனைத்தும் வரிசையில் நிற்கின்றன. இதன் காரணமாக தமிழகம் -கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திம்பம் மலைப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News