தமிழ்நாடு செய்திகள்

ஆழியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2025-07-27 08:12 IST   |   Update On 2025-07-27 08:12:00 IST
  • ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
  • ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை விடாது கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் பி.ஏ.பி. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சோலையாறு அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின.

ஆழியாறு அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,763 கன அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,763 கன அடி நீர் 11 மதகுகள் வழியாக ஆழியாற்றில் திறந்து விடப்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,677 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வினாடிக்கு 2,518 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

ஆழியாறு அணையில் இருந்து 4,151 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பராம்பாளையம், ஆனைமலை, ஆத்து பொள்ளாச்சி, காளியப்பா கவுண்டன்புதூர் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News