திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது - இ.பி.எஸ் கோபம்
- உண்மையைச் சொன்னால் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாகச் சொல்கிறார்.
- அது கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி, செல்வாக்கை இழந்ததால் வீடுவீடாகப் போய் உறுப்பினர் சேர்க்குறாங்க.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆம்பூரில் பிரசார பயணம் முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார்.
குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்.எஸ்.சாலையில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிக்கு இங்கு குழுமியிருக்கும் மக்களே சாட்சி.
இங்கு விவசாயம், நெசவு, தீப்பெட்டி, பீடி ஆகிய தொழிலை நம்பித்தான் மக்கள் உள்ளனர். இந்த தொழில்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.
கைத்தறி நிறைந்திருக்கிறது. இங்கிருந்து லுங்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பல திட்டங்கள் கொடுத்தோம்.
இன்றைய திமுக அரசில் கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி 15 நாட்களுக்கு ஒரு முறையே கிடைக்கிறது. மீண்டும் அதிமுக வந்ததும் அன்றாடம் நெசவாளர்களுக்கு கூலி பட்டுவாடா செய்யப்படும்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. விலைவாசி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலை. அதிமுக ஆட்சியில் விலையைக் கட்டுப்படுத்த, எங்கு குறைந்த விலைக்குக் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து விலைவாசியைக் கட்டுப்படுத்தினோம்.
ஏழைகள் பாதிக்கப்படும் நேரெமெல்லாம் காப்பாற்றியது அதிமுக அரசு. தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு 18% இருந்து 12% ஆக ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசி குறைத்துக் கொடுத்தோம். தீக்குச்சி மரம் இறக்குமதி செய்ய 5% வரி ரத்து செய்து கொடுத்தோம்.
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அதில், 2,818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். இப்படி ஒரு திட்டமாவது திமுக ஆட்சியில் இருக்கிறதா? கேட்டால், உரிமைத் தொகை கொடுத்தோம் என்பார் ஸ்டாலின்.
அவராகக் கொடுக்கவில்லை. 28 மாதம் கொடுக்கவில்லை. அதிமுக தான் போராடி வாங்கிக்கொடுத்தது. இப்போது தேர்தல் வர இருப்பதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.
பெண்களின் கஷ்டத்தை பார்த்துக் கொடுக்கவில்லை, அதிமுக அழுத்தத்தைப் பார்த்தும், தேர்தல் காரணமாகவும் கொடுக்கிறார்.
மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் செல்வாக்கை இழுந்துவிட்டார். இந்நிலையில் மக்களை ஏமாற்ற தந்திரமாக திமுக அரசு செயல்படுகிறது. திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்து பழக்கமே இல்லை.
10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். திமுக ஆட்சியில்தான் ஒன்றுமே இல்லை. 5 ஆண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். நாமே அந்தக் கடனை கட்ட வேண்டும். 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் இருந்த கடனை விட திமுக அரசின் கடன் சுமை அதிகம். எப்படித்தான் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
ஒரு பக்கம் கடன், இன்னொரு பக்கம் டாஸ்மாக், பத்திரபதிவு உள்ளிட்டவற்றில் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் எந்த புதிய திட்டம் கொடுக்கவில்லை. பொம்மை முதல்வர் ஒரு திட்டம் அறிவிப்பார், பெயர் வைப்பார், இப்படியே நான்காண்டுகள் ஓட்டிவிட்டார்.
உண்மையைச் சொன்னால் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாகச் சொல்கிறார். மின்கட்டணம், வரி எல்லாம் உயர்ந்துவிட்டது.
திமுக 525 அறிவிப்புகள் கொடுத்தது. 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்துவேன் என்றார், உயர்த்தவில்லை. சம்பளமும் உயர்த்தவில்லை.
அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றி தேசிய விருதுகள் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலேயே கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்றுதான் திமுக பெயர் பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் முக்கியமான தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். கருணாநிதி குடும்பத்தினர் தான் ஆட்சியிலும், கட்சியிலும் பதவிக்கு வர முடியும்.
அது கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி, செல்வாக்கை இழந்ததால் வீடுவீடாகப் போய் உறுப்பினர் சேர்க்குறாங்க. உறுப்பினர் சேர்க்கவே பிச்சை எடுக்கும் ஆட்சி தொடர வேண்டுமா? வரும் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள'' என்றார்.