தமிழ்நாடு செய்திகள்

ஜி.பி. முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2025-05-14 11:46 IST   |   Update On 2025-05-14 11:46:00 IST
  • எனது ஊரான உடன்குடி காலன்குடியிருப்பு பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெரு இருந்தது.
  • கடந்த 20 ஆண்டுகளில் கீழத்தெரு காணாமல் போய்விட்டது.

சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வட்டார மொழியில் பேசும் அவரது பேச்சு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனிடையே, தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எனது ஊரான உடன்குடி காலன்குடியிருப்பு பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெரு இருந்தது. இந்த பகுதியில் அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் கீழத்தெரு காணாமல் போய்விட்டது.

அந்த தெரு முழுவதும் பல்வேறு தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பாதையும் அடைக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த பகுதியில் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கீழத்தெருவை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஜி.பி.முத்து அளித்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக ஊர் பொதுமக்கள் கூறியிருந்தனர். இதையடுத்து வீடியோ வெளியிட்டு பேசிய ஜி.பி.முத்து, போலீசார் தனக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், ஜி.பி.முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News