தமிழ்நாடு செய்திகள்

10 நாட்களுக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2025-06-05 11:45 IST   |   Update On 2025-06-05 11:45:00 IST
  • பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.
  • தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது.

நெல்லை:

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.

இதன் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதிக்குள் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.

தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் மணி முத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான நிலையில் 10 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறைந்த நிலையிலும் மாஞ்சோலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 3 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 5 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 9 மில்லி மீட்டரும், ஊத்தில் 6 மில்லி மீட்டரும் இன்று மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News