பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது- சென்னை ஐகோர்ட்
- துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
- இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பண பரிவர்த்தனையோ, முறைகேடோ நடைபெறவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.