கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 21-ம் ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய பெற்றோர்கள்
- கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
- அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (புதன்கிழமை) 21-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய பேனர் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனருக்கு பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அக்குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாலை தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் இருந்து தீபம் ஏந்தியவாறு, மவுன ஊர்வலம் புறப்பட்டு, மகாமக குளத்திற்கு சென்று மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.