தமிழ்நாடு செய்திகள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 23-ந்தேதி கொடியேற்றம்: பாசிமாலை விற்பனை 'படுஜோர்'

Published On 2025-09-03 09:57 IST   |   Update On 2025-09-03 09:57:00 IST
  • பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.
  • ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி நள்ளிரவு சூரசம்காரம் நடக்கிறது.

4-ந் தேதி தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருவதுடன், தசரா திருவிழாவில் கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 21, 11 நாட்கள் என தங்களுக்கு ஏற்றவாறு என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.

தசரா திருவிழாவையொட்டி பாசி மாலை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதியில் தங்கி உள்ளனர். ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது. சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர்.

தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து இதனை வாங்கிசெல்வதால் பாசி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. மேலும் தற்போது கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள் தினசரி குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

Tags:    

Similar News