20 மாவட்டங்களில் தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் புது அப்டேட்
- நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
- 21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தேனியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகள், விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே, வருகிற 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தீபாவளி நாளான 20-ந்தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.