தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது

Published On 2025-06-25 10:25 IST   |   Update On 2025-06-25 10:25:00 IST
  • நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
  • அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்:

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. இந்த நீர்வரத்தை கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டார். அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். இருப்பினும் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News